
அமர்நாத் குகையில் தானே தோன்றும் பனிலிங்கமான சிவனைக் காண இந்த வேனில் காலத்தில் "அமர்நாத் யாத்ரா"வில் பலர் பங்கு பெறுகின்றனர். இந்தப்பனி லிங்கம் காட்சித் தரும்போதெல்லாம் மேலே இரண்டு புறாக்கள் சுற்றிச்சுற்றி வந்து மறையும்.
அந்தப் புறாக்களைப் பார்க்கவும் பலர் செல்கின்றனர். அந்தப் புறாக்கள் உண்மையாக இரண்டு சிவகணங்களாக இருந்து பின் சபேசன் கொடுத்த சாபத்தினால் இப்படி புறாக்களாக ஆகிவிட்டனர். இதே போல் சிவன் பனிலிங்கம் ரூபத்தில் காட்சியளித்ததும் அந்தப் பரமேஸ்வரிக்காகத்தான்.
இந்தப் புராணக் கதையை நாம் கொஞ்சம் பார்க்கலாமே.
ஒருசமயம் பரமேஸ்வரன் குடும்ப சமேதமாக அமர்ந்திருந்தார். அவருடன் விக்னநாசகர் வினாயகர், பயத்தைப் போக்கும் முருகப்பெருமான் இருவரும் அமர்ந்திருந்தனர். தனக்கு வேண்டிய கேளவிகளையெல்லாம் தன் தந்தையிடம் கேட்டு பதில்களையும் பெற்று சந்தோஷமடைந்தனர்.
"பார்வதி... உனக்கு எதாவது கேள்விகள் உண்டா? உன் பங்குக்கு நீயும் கேள்'
"ஆம் சுவாமி நானும் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். இந்த உலகம் எப்படி உற்பத்தி ஆனது ?"
"இந்தக் கேள்விக்கு விடை அளிக்க இந்த இடம் ஏற்றது இல்லை . இதற்கு ஏற்ற இடத்திற்குப் போனப்பின் சொல்கிறேன் என்று கூறியபடியே கிளம்பினார் பரமேஸ்வரன். போகும் வழியில் ஒவ்வொருவராக கழட்டிவிட்டார். ஒரு அழகான நந்தவனத்தை கண்டு கணபதி மயங்கி நிற்க, அவரை அங்கு இருக்கச்சொன்னார்.
குமரனுக்கும் பிடித்தமான குன்றில் இடம் கொடுத்தாயிற்று. பின் பல சிவகணங்களும் தங்கிக்கொள்ள பிரயாணம் மேலே தொடர்ந்தது. ஆயிற்று இமாலய மலையையும் தொட்டாயிற்று' பரமேஸ்வரனும் பார்வதியும் தனித்து இருக்க ஒரு குகையினுள் நுழைந்தனர்.
உள்ளே 'கீக்கீ கீ கீ ' என்ற சப்தம் அழகாக வந்து கொண்டிருந்தது. ஆம் அந்தக் குகையினுள் அழகான கிளி கூட்டில் தன் குஞ்சுகளுடன் இருந்தது. அந்தக் கிளி பரமேஸ்வரனும் பார்வதியும் நுழைந்ததைப் பார்த்து அவர்கள் சிருஷ்டியின் ரகசியத்தைப் பற்றி பேசப்போகும் நோக்கத்துடன் அங்கு வந்திருப்பதை அவர்கள் பேச்சினால் புரிந்துகொண்டது. அந்த நேரத்தில் தான் அங்கு இருப்பது சரியல்ல என நினைத்து குஞ்சுகளை அங்கேயே விட்டுவிட்டு தான் மட்டும் வெளியில் பறந்து போனது.
ஆரம்பித்தது இங்கு சிருஷ்டியின் நோக்கம் ......மகேசன் அழகாக அந்தத் தத்துவத்தை விளக்க, பார்வதி அப்படியே அதில் லயப்பட்டு ," உம் உம் என்ற ஒலியை மட்டும் கொடுத்துக் கேட்டாள். கேட்டபடியே அவள் இமைகள் மூட, தூக்கம் அவளைத் தழுவியது. இதையெல்லாம் பார்த்தபடியிருந்த கிளிக்குஞ்சு, "பாதி ரகசியம் கேட்டாயிற்று. முழு ரகசியமும் கேட்க வேண்டுமே! அம்பாள் உம் உம் என்று கொட்டவில்லையென்றால் மகேசன் ரகசியத்தைச் சொல்லாமல் ஒருக்கால் நிறுத்தி விட்டால் ........ " என்று எண்ணி தான் உமையவளுக்குப் பதிலாக "உம்" கொட்ட ஆரம்பித்தது பரமேஸ்வரன் மனதில் சிரித்து கொண்டார்.
தான் கேட்கும் "உம்" என்ற ஒலி தன் சக்தியான பரமேஸ்வரியினது இல்லை என்றும் தெரிந்தது அவருக்கு.....வாசலில் இரண்டு சிவகணங்கள் உள்ளே பரமேஸ்வரன் சொல்லுவதை ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்தன. பரமேஸ்வரனாயிற்றே ! இதை அறிய மாட்டாரா என்ன! ஆனாலும் பாதியில் உபதேசத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார்.
எல்லாத் தத்துவங்களும் சொல்லி முடித்தப்பின் ஒரு வினோதம் அங்கு நிகழ்ந்தது. குகையினுள்ளே இவையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்தக் கிளிக்குஞ்சு இறக்கை வந்ததுப்போல் வெளியே பறந்து வியாசமுனிவர் ஆஸ்ரமம் வரை சென்றது. சின்ன குஞ்சு அத்தனைச் சக்தியுடன் பறக்க வேண்டுமென்றால், சிவபெருமானின் சக்தி எப்படிப்பட்டதாக இருக்கும்?! அங்கு சூட்சுமரூபம் எடுத்து வசிஷ்டர் மனைவியின் கர்ப்பத்தில் நுழைந்தது.
இதுவேதான் பின்னால் கிளிமுகக் குழந்தையாய் அவதரித்தது. நல்ல தேஜஸ். பிறவி ஞானத்துடன் சுக முனிவரானது. இந்த சுகமுனிவர் பிறந்த உடனேயே பிறவி ரகசியத்தைப் போதிக்கும் சக்தி பெற்றிருந்தார். ஆனால் மகேசனின் உத்தரவு கிடைக்காததால் தான் நேரில் கேட்டதை மறைமுகமாக பல கதைகள் மூலம் உபதேசித்தார்.
பார்வதியின் நிலை என்னவாயிற்று ?
தான் கண்களை மூடிக்கொண்டதும், பின் சற்று உறங்கிவிட்டதும் தெரிந்து சட்டென்று கண்களைத் திறக்க, அங்கு தன் பதியைக்காணோம். சபேசனோ தான் முக்கியமாக ஒன்று சொல்லும் போது பார்வதி உறங்கிவிட்டாளே என கோபித்து அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார். பார்வதியும் தான் செய்ததை நினைத்து மனம் வருந்தி பனிமலை முழுவதும் அலைந்தபடி சிவனைத் தேடினாள். பின் அங்கேயே பனிமலையில் தவமும் இருந்தாள். பரமேஸ்வரனும் மனம் நெகிழ்ந்து அவள் தவம் செய்த இடத்திலேயே உறைந்துப்போன பனிலிங்க வடிவில் அந்த குகையில் காட்சியளித்து தன்னிடம் சேர்த்துக்கொண்டார். இன்றும் அமர்நாத்தில் மிக அழகான அந்த பனிலிங்கத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையில் கலந்துக்கொள்கிறார்கள். அமர்நாத் குகையில் பனிலிங்கம் இருக்கும் இடமும் சுற்றுப்புறச் சூழலும் நாம் பார்க்க நேரிட்டால் அங்கு நிச்சியமாக தெய்வம் இருப்பதை உணரமுடியும்.
அன்புடன்
-விசாலம்
Apr 19, 2012
* Do not use semicolon(;)