
சென்னை, மார்ச் 9 (டிஎனஎஸ்) ராதா மோகனிடம் இணை இயக்குநராகவும், அபியும் நானும் படத்தின் வசனகர்த்தாவுமான சுப்பிரமணியன் இயக்கியிருக்கும் முதல் படம்.
திருச்செந்தூரில் சொந்தமாக பேன்ஸி ஸ்டோ ர் வைத்திருக்கும் அருண் பாலாஜிக்கு, மற்றப் பசங்களைப் போலவே நாயமி பாமாவை பார்த்ததும் அவர் மீது காதல் ஏற்படுகிறது. தன் காதலை வளர்க்க பாமாவை தேடி அலையும் அருண் பாலாஜி ஒரு வழியாக பாமாவை கண்டுபிடித்து தனது காதலிலும் வெற்றி பெற்று விடுகிறார்.
கதையின் மற்றொரு ஏரியாவில் அதே திருச்செந்தூரில் மீனவ கிராமத்தில் மீன் வேனின் டிரைவராக பணியாற்றும் பவன், தனது தங்கையை தனது முதாலாளிக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொடுக்க முயல்கிறார். இதற்காக அவர் ஓட்டும் வேனையே அவருடைய முதலாளி பரிசாக கொடுக்கிறார்.
இதற்கிடையில் பவனின் தங்கை தான் காதலித்தவனுடன் ஓடிவிடுகிறார். இதனால் பவனுக்கு முதலாளி கொடுத்த வேன் பறிக்கப்படுகிறது. வேன் போன சோகத்தில் இருக்கும் பவன், தனது தங்கை காதலுடனுடன் சென்றதற்கு அருண் பாலாஜி தான் காரணம் என்று தவறுதலாக புரிந்துகொள்கிறார். இதனால் தனது வேனை வைத்து அருண்பாலாஜியின் பைக்கில் மோத அந்த விபத்தில் அருண்பாலாஜியின் அம்மா இறந்துப் போகிறார். இதை விபத்து என்று நினைத்துகொண்டிருக்கும் அருண்பாலாஜிக்கு ஆறு மாதம் கழித்து இது திட்டம் போட்டு நடத்தப்பட்டது என்பதை பவன் மூலமாகவே தெரிந்துகொள்ளும் அருண்பாலாஜி, பவனை அவருடைய கிராமத்திலே அடித்து துவைக்கிறார். இந்த சண்டையில் பவன் அணிந்திருந்த சட்டை, லுங்கி மட்டுமிலாமல் ஜட்டி முதல் கொண்டு கிழிந்துபோக, நிர்வாணமான கோலத்தில் கிராம மக்களின் முன் அவமானப் படுகிறார் பவன். இதனால் அருண்பாலாஜியை பழிவாங்குவதற்காக பவன் அலைய, இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் க்ளைமாக்ஸ்.
குற்றாலீசுவரனின் நீச்சல் சாதனையை முறியடித்து, முன்னணி நீச்சல் வீரராக திகழும் அருண்பாலாஜி பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறார். தலைமுடியில் மட்டும் ஏதோ துரு பிடித்ததுப் போல ஒரு செம்பட்டை கலர் அவருக்கும், அவர் கதாபாத்திரத்திற்கு ஒட்டாத ஒன்றாக இருக்கிறது. சண்டைக்காட்சி, ஆக்ரோஷமான எக்ஸ்பிரஷன் என்று கொடுத்த வேலை சரியாக செய்திருக்கிறார்.
ஹோம்லி லுக்குடன் சின்ன எக்ஸ்பிரஷன்களில் மனசை அள்ளுகிறார் நாயகி பாமா. நடிப்பத்ற்கு பெரிதாக ஒன்றுமில்லையென்றாலும். வந்த காட்சிகளில் வஞ்சனை இல்லாமல் திரையை நிறப்பிவிட்டு செல்கிறார்.
எங்கேயும் எப்போதும் சத்யாவின் இசையில் 'கம்பி மத்தாப்பு' பாடல் இத்த ஆண்டு சூப்பர் ஹிட் பாடல் என்று சொல்லலாம். மற்ற பாடல்கள் ஓகே ரகம் தான். பாடல்கள் அனைத்துமே வைரமுத்து எழுதியிருக்கிறார்.
பி.செல்லதுரை, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தார் என்பதை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார். லைட்டிங், லொக்கேஷன் என ஒளிப்பதிவில் அசத்தியிருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் ரசிகர்களை உச்சாகமடைய செய்த இயக்குநர் இரண்டாம் பாதியில் சிறிது சோர்வடைய செய்கிறார். அருண்பாலாஜி, பவன் இருவருக்குமிடையே உள்ள பகையை வைத்து காட்சிகளை நகர்த்திய இயக்குநர் தீடீரென்று இரண்டு அண்ணாச்சிகளை புகுத்தி காமெடி செய்துவிட்டார். (காமெடி நடிகர்கள் இல்லாத குறையை தீர்ப்பதற்காக இப்படி செய்தாரோ என்னவோ)
மற்றபடி நடிகர்களிடம் இயல்பான நடிப்பை வாங்குவது, பாடல் காட்சிகளை படமாக்கிய விதம், சாதாரண லொக்கேஷன்களை கூட கவனிக்க வைத்த விதம் என இயக்குநர் சுப்பிரமணியன் அப்ளாஸ் வாங்குகிறார்.
இரண்டரை மணி நேரம் படத்தை இழுக்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாத காட்சிகளை வைத்து ரொம்ப போரடிக்காமல், சொல்ல வந்ததை மட்டும் சொல்லிருப்பதால் சேவற்கொடியை ஒரு முறை பார்க்கலாம். (2 மணி நேரம் படம் தான்)
ஜெ.சுகுமார்
Mar 09, 2012
* Do not use semicolon(;)