
சென்னை, ஏப்.14 (டிஎன்எஸ்) தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஹீரோவாக அறிமுகமாகும் படம். ராஜேஷ் மற்றும் சந்தானம் கூட்டணியில் உருவாகியிருக்கும் மூன்றாவது படம். என்று ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்திய படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி.
இப்படத்தின் கதை இதுவரை தமிழ் சினிமாவில் வராத கதை ஒன்றும் இல்லை என்றாலும், அதற்கு இயக்குநர் திரைக்கதை அமைத்திருக்கும் விதம்தான் படத்தை வெற்றியடைய செய்திருக்கிறது. (படத்தின் வெற்றிக்கு திரைக்கதை தான் முக்கியம் என்பதை உணர்த்தும் மற்றொரு படம்).
ஹன்சிகாவை பார்த்ததும் காதல் கொள்ளும் உதயநிதி, தனது நண்பனான சந்தானத்தின் துணையோடு தனது காதலை வளர்க்க, அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தான் கதை. இந்த சாதாரண கதைக்கு கலகலப்பான காமெடி காட்சிகளுடன் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து ஹாட்ரிக் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.
அறிமுகமான முதல் படத்திலேயே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார் உதயநிதி. தயாரிப்பாளர் என்ற அடையாளத்தை மறைத்து, அடக்கமான அறிமுகநாயகனாக நடித்து ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணியிருக்கிறார். நடனம், காமெடி இது இரண்டிலும் வெற்றி கண்டாலே அவர்களை தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என்பது உதயநிதிக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால் தான் இது போன்ற கதையை தேர்வு செய்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார்.
கிட்டத்தட்ட படத்தின் இரண்டாவது ஹீரோ என்று சந்தானத்தை சொல்லலாம். அந்த அளவுக்கு படம் முழுவதும் வரும் சந்தானத்தின் ஒவ்வொரு காட்சியும் கலகலப்பு. அதிலும் பிளைட்ல ஹன்சிகா "ஆபத்து வரும் போது பாராசூட் தருவோம்" என்று சொல்லும் போது, அதற்கு சந்தானம் "உயிர் போகும் நேரத்துல தேங்காய் எண்ணேய்ய வச்சிக்கிட்டு நாங்க என்ன பண்றது". என்று கேட்கும் இடத்தில் ரசிர்களின் சிரிப்பு சத்தம் மற்றோரு பூகம்பத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை கொடுத்தது.
ஹன்சிகா மோத்வானி, பாலில் பிசைந்து செய்த மைதாமாவு சிலை போல இருக்கிறார். (என்ன சிலைக்கு இருக்கும் வலைவு சுலிவுதான் மிஸ்ஸிங்) உதநிதியிடம் கோபப்படுவது, சிரிப்பது, முறைப்பது, அழுவது இவைதான் ஹன்சிகாவின் நடிப்புகள். அதை நன்றாகவே செய்து அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
உதயநிதியின் அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வன்னனின் நடிப்பு எப்போதும் போல கலைகட்டியிருக்கிறது. 20வருஷம் பேசாத தன் கணவர் பேசியவுடன் அதற்கு சரண்யா பொன்வன்னன் கொடுக்கும் எஸ்பிரஸன் இவரை நடிகையில் ஒரு நாசர் என்று சொல்ல வைக்கிறது.
உதயநிதியின் அப்பாவாக வரும் அழகம் பெருமாளின் நடிப்புக் ஒகேதான். ஹன்சிகாவின் அப்பாவாக நடித்திருக்கும் ஷயாஜி ஷிண்டேவின் நடிப்பும் ஓகேதான்.
பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு பளிச்சென்ற ஒரு ஆல்பத்தை பார்த்ததுபோன்ற உணர்வை தருகிறது. பாடல் காட்சிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் லொகேஷன்கள் பிரமாதம்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அத்தனையும் ஹிட் ரகம் தான். அதிலும் 'வேணாம் மச்சான் வேணாம்' என்ற பாடலுக்கு திரையரங்குகளில் எழுந்து ஆடுகிறார்கள். கூடவே ஒன்ஸ்மோர் என்ற சத்தமும் கேட்கிறது. மற்ற பாடல்களான 'காதல் ஒரு பட்டர்பிளை', 'அகிலா அகிலா' என்று அனைத்துப் பாடல்களும் திரும்ப திரும்ப கேட்கும் ரகங்கள்தான்.
இயக்குநர் ராஜேஷ், எதைப் பற்றியும் கவலைப்படாமல் காமெடி ஒன்றின் மீதே தனது அத்தனை உழைப்பையும் கொட்டியிருக்கிறார். அழுதாலும் காமெடி, சிரித்தாலும் காமெடி என்று படம் முழுவதும் ஒரே காமெடி கலவரம்தான். அதிலும் சந்தானத்தை அவருடைய விருப்பத்திற்கேற்ப இயங்க வைத்து ஒட்டு மொத்த படத்தையும் அவரையே சுமக்க வைத்திருக்கிறார்.
படத்திற்கு கதை முக்கியமல்ல, திரைக்கதை தான் முக்கியம் என்பதை தனது ஹாட்ரிக் வெற்றியின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கும் இயக்குநர் ராஜேஷ், திரும்ப திரும்ப தனது அனைத்து படங்களிலும் இந்த கெஸ்ட் ரோல்களை வரவைப்பதுதான் கொஞ்சம் சலிப்பு ஏற்பட வைக்கிறது. ( ராஜேஷின் அடுத்தப் படத்தில் உதயநிதி கெஸ்ட் ரோலாக நடிக்கப் போகிறார் என்ற செய்தியை இப்பவே பத்திரிகையாளர்கள் டைப் பண்ண ஆரம்பித்திருப்பார்கள்).
சினிமா என்றாலே லாஜிக் பார்க்ககூடாது. அதிலும் இதுபோன்ற சினிமாவில் சொல்லவா வேண்டும். சிரித்தால் இருதய நோய் வராதாம். அப்போனா ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைப் திரும்ப திரும்ப பார்க்கலாம். (அதற்காக திருட்டு விசிடி வாங்கி வீட்ல வச்சிக்காதீங்க).
ஜெ.சுகுமார்
Apr 14, 2012
* Do not use semicolon(;)