
சென்னை, ஏப்.12 (டிஎன்எஸ்) சின்னத்திரை சிரிப்பு மன்னன் என்றும் கூட சிவகார்த்திகேயனை சொல்லலாம். அந்த அளவுக்கு சின்னத்திரையில் கொடிகட்டி பறந்த இவருடைய சிரிப்பு சமாச்சாரங்கள் வெள்ளித்திரையில் வெளியாக இருக்கிறது. இவருடைய முதல் திரைப்படமான 'மெரினா' எப்படியோ, அடுத்ததாக நடித்த '3' படத்தில் சிவா வரும் காட்சிகள் வரை படம் பார்க்குற மாதி இருக்குப்பா...என்று சொல்லும் அளவுக்கு பேர் வாங்கிவிட்டார்.
சிவகார்த்திகேயனின் முதல் இரண்டு படத்தை காட்டிலும் மூன்றாவது படமான 'மனம் கொத்திப் பறவை' அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை கொடுக்கும் என்பதை, நேற்று (ஏப்ரல் 11) ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியே உறுதி செய்துவிட்டது.
படம் எப்படி இருக்கும் என்பதை லைவ்வாக மேடையில் நடத்தி காட்டியது போல நிகழ்சிக்கு வந்திருந்த நடிகர்கள் ஒவ்வொருவரும் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைத்தார்கள். முதலில் சிங்கம் புலி கொளுத்தி போட்ட சிரிப்பு வெடியை தொடர்ந்து சூரி, சாம்ஸ், ஸ்ரீகாந்த், சிவகார்த்திகேயன் என அனைவரும் வெடிக்க தொடங்கினார்கள். நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், "இந்த படத்துல நடிக்கும்போது ரொம்பவே ஜாலியாக இருந்தது. எனக்கு நண்பர்கள் என்று கூறி ஒரு நாலு பேரை அறிமுகம் செய்து வைத்தார்கள். ஐந்தாவதாக சிம்கம் புலி சாரை அறிமுகம் செய்தார்கள். டைரக்டர் தான் ஏதோ சொல்ட்றாருனா எனக்கு நண்பனாக நடிக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது என்று அவரை கேட்டா, "சீக்கிரம் முடி கொட்டிடுச்சின்னு நினச்சிக்கப்பா என்று கலாய்க்குறாரு.
இந்த படத்துல நடிச்ச அத்தனைப் பேரும் ஐடியா சொல்லுவாங்க, கேமரா மேன்கூட கேமராவ விட்டுட்டு, இந்த காமடிய இந்த காட்சில பயன்படுத்தினா எப்படி இருக்கும். என்று ஐடியா கொடுப்பாரு. ஒரு கட்டத்துல எழில் சார், இந்த திரைக்கதை தான் நான் எழுதியிருக்கேன். விரும்பம் இருந்தா இதை செய்யுங்க இல்லைனாலும் ஓகே. என்று சொல்லும் நிலைக்கு வந்துருவாரு. இந்த படத்துல நடித்த அத்தனைப் பேரும் ஹீரோதான். நான் மட்டும் ஹீரோ இல்ல. நான் ஹீரோன்னு சொன்னாலும் அதை நீங்க ஒத்துக்க மாட்டிங்க அது வேற விஷயம் விடுங்க. மொத்தத்துல இந்த படம் ஒரு கலகலப்பான காமெடி நிறைந்த ஒரு கியூட் லவ் ஸ்டோரி படமாக இருக்கும்." என்றார்.
டி.இமான் இசையில் பாடல்கள் அத்தனையும் அசத்தலாக இருந்தது. நிகழ்ச்சியில் ஒளிபரப்பட்ட பாடல்களும், அதை காட்சி படுத்திய விதமும் சிறப்பாக இருந்தது. அறிமுக ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு அபாரம்.
இயக்குநர் எழில் பேசுகையில்,"இந்த படத்தை எடுக்க எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது என் நண்பர்கள் தான். அதன் பிறகு இதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், உதவி இயக்குநர்கள் என அத்தனைப் பேரும் புதியவர்கள் தான். அவர்களை வைத்துகொண்டு தைரியமாக இந்த படத்தில் இறங்கினேன். இப்போது முழு படத்தையும் முடித்து விட்டோம். என்னை இவர்கள் பிரமிக்க வைத்து விட்டார்கள். நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கொடுத்திருக்கிறார்கள்." என்றார். (டிஎன்எஸ்)
Apr 12, 2012
* Do not use semicolon(;)