சென்னை, பிப்.5 (டிஎன்எஸ்) கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ 790 கோடி செலவில் சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்குடன் ரூ.790 கோடி செலவில் சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
துயரத்தில் வாடும் உழவர்களுக்கு உதவும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் வரவேற்கத்தக்கது. தானே புயலால் பலா மற்றும் முந்திரி மரங்கள் அழிந்ததால் அதை நம்பியிருந்த உழவர்களின் வாழ்வாதாரம் அடியோடு அழிந்து விட்டன. எனவே, அவர்கள் முந்திரி மற்றும் பலா மரங்களை நட்டு அவை மீண்டும் பயன்தர தொடங்கும் வரை அவர்களுக்கு விதை, உரம் உள்ளிட்ட உதவிகளையும் பராமரிப்பு செலவையும் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
இந்த நிலையில் முந்திரி, பலா போன்ற தோட்டக்கலை பயிர்களை பயிரிடும் உழவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும். விழுந்த மரங்களை அகற்ற தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்படி உதவி வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்கான பராமரிப்பு செலவை அரசே ஏற்றுக் கொள்ளும். ஆண்டு தோறும் உரங்கள், உயிர் உரங்கள், தாவரப் பூச்சிக் கொல்லிகள் போன்றவை வழங்கப்படும், பாசன வசதிகள் செய்து தரப்படும் என பல உள்ளிட்ட சலுகைகளை தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எதிர்காலமே இருண்டு போய்விட்டதாக கருதி சோகத்தில் வாடும் உழவர்களுக்கு ஓரளவாவது வெளிச்சத்தை காட்ட தமிழக அரசின் இந்த நடவடிக்கை உதவும்.
அதேபோல் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புயல் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து உழவர்கள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்றும், உழவர்கள் பெற்ற கடன்களை திரும்ப செலுத்தும் காலம் அதிகரிக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்க நடவடிக்கைத்தான். முந்திரி, பலா சாகுபடி செய்யும் உழவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு செலவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, அப்பயிர்கள் முழுமையாக பயன்தரத் தொடங்கும் வரை பராமரிப்பு செலவை வழங்க முன்வரவேண்டும்.
அதேபோல் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெற்ற கடனின் அளவு ரூ.440 கோடி என்று முதல்-அமைச்சர் அறிவித்திருக்கிறார். தானே புயல் இடர் உதவிக்காக இதுவரை சுமார் ரூ.1,800 கோடி அளவுக்கு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், கூடுதலாக ரூ.440 கோடி பயிர்க்கடனையும் ரத்து செய்தால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்பட்டு விடாது. எனவே கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உழவர்கள் பெற்ற பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். (டிஎன்எஸ்)
Feb 05, 2012
* Do not use semicolon(;)