
திருவனந்தபுரம், நவ.7 (டிஎன்எஸ்)
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய காவல் படையினரை நிறுத்த வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கைக்கு, கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு இடையே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அணைப்பகுதிக்கு செல்ல தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் கருணாநிதி கோரிக்கை விடுத்து இருந்தார். கருணாநிதியின் இந்த கோரிக்கைக்கு, கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம், கருணாநிதியின் கோரிக்கை பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அச்சுதானந்தன், "முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் தண்ணீரை தடுத்து நிறுத்திவிட முடியுமா?'' என்று கேட்டார். பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது:
"ஆற்றின் கரையோரம் வசிக்கும் கேரள மாநிலத்தின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 40 லட்சம் மக்களின் பாதுகாப்பு குறித்த பிரச்சினை இது. நூற்றாண்டை கடந்த இந்த அணைக்குப் பதிலாக மாற்று அணை கட்ட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வற்புறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த 1979ஆம் ஆண்டில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது புதிதாக மாற்று அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், பின்னர் எந்தவித காரணமும் இன்றி தமிழக அரசு அந்த நிலையில் இருந்து பின்வாங்கிவிட்டது.
உலகிலேயே மிகவும் பழமையான இந்த அணை அமைந்திருக்கும் பகுதி, நிலநடுக்க தாக்குதல் ஆபத்து நிறைந்தது என்றும், அத்தகைய நிலநடுக்கங்களின்போது முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் என்றும், சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அப்படி இயற்கை பேரழிவு ஏற்பட்டால், 40 லட்சம் மக்களும், அவர்களுடைய உடைமைகள் அனைத்தும் அரபிக்கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டுவிடும்''.
இவ்வாறு அச்சுதானந்தன் கூறினார்.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)