திருப்பதி, மே.2 (டிஎன்எஸ்) திருப்பதி தேவஸ்தான விதிமுறைகளை மீறி ஜெகன்மோகன் ரெட்டி தரிசனம் செய்ததாக ஆந்திராவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி வெங்கடாசலபதி தேவஸ்தானத்தில் இன்று (மே 2) சாமி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் தவிர, மற்ற மதத்தவர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டுமானால் அங்குள்ள அறிவிப்பு பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.
ஆனால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான ஜெகன்மோகன், தேவஸ்தானத்தின் இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் நேராக சென்று சாமி தரிசனம் செய்தார். இவ்வாறு விதிமுறைகளை மீறி ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதியில் தரிசனம் செய்த விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஜெகன்மோகன் கடந்த 2009ம் ஆண்டு திருப்பதி சென்றபோது, நடைமுறைப்படி கையெழுத்திட்டுள்ளார் எனவும், எனவே எல்லா முறையும் கையெழுத்திட தேவையில்லை எனவும் ஜெகன் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் சோனியா காந்தி போன்ற தலைவர்கள் கூட ஒவ்வொரு முறையும் திருப்பதியில் கையெழுத்திட்டு வருவதாக சிலர் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஜெகன்மோகன் விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சுப்ரமணியம் கூறியுள்ளார். (டிஎன்எஸ்)
May 02, 2012
* Do not use semicolon(;)