
சென்னை, பிப்.1 (டிஎன்எஸ்) தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்துவிட்டால் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்று இன்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தைக் குறிப்பிட்டு சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மிகவும் காட்டமாகக் கூறினார்.
இன்று அவை கூடியதும், உறுப்பினர்கள் தங்கள் தொகுதி கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, விலைவாசி உயர்வு குறித்து பேசிக்கொண்டிருந்த தேமுதிக எம்.எல்.ஏ சந்திரகுமார், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு அரசு பலவிதங்களில் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்த்தும் முடிவினை இந்த அரசு தைரியம் இருந்திருந்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும் என்று பேசினார்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா, இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது. அப்போது நீங்களும் தைரியமிருந்தால் தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று கூறினார்.
அதற்கு விஜயகாந்த் எழுந்து, இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சிதான் ஜெயிக்கும். அது இயல்புதானே என்று கூறினார்.
அதற்கு முதல்வர், இப்போதே எதிர்க்கட்சித் தலைவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறார் என்றார்.
அதற்கு பதிலளித்த விஜயகாந்த் ஏன் நீங்கள் கூடத்தான் பென்னாகரம் இடைத்தேர்தலில் தோற்றீர்களே என்றார். இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் எழுந்தது. தேமுதிக உறுப்பினர்களும் அதிமுக உறுப்பினர்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே போனார்கள். இருதரப்பும் என்ன பேசினார்கள் என்பது மற்ற யாருக்கும் புரியவுமில்லை. பேரவையில் கூச்சல் குழப்பம் அதிகரித்தது.
இந்நிலையில், பேரவையை அமைதி நிலைக்குக் கொண்டுவர, குழப்பம் ஏற்படுத்திய தேமுதிக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதனிடையே சட்டமன்றத்தில் தேமுதிக உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார். இதனைக் கேட்ட சபாநாயகர், தேமுதிக உறுப்பினர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்ட விதம் குறித்து உரிமைக்குழு விசாரிக்க பரிந்துரை செய்வதாகக் கூறினார்.
இந்நிலையில் முதல்வர் எழுந்து, சபையில் தேமுதிக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதத்துக்கு அவர்களை சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் குறைந்த பட்ச தண்டனை பரிந்துரையாக உரிமைக் குழுவுக்கு அனுப்பச் சொல்கிறார்.
ஆகவே பேரவைத் தலைவர் தனது முடிவை அறிவித்த பிறகு வேறு எந்த உறுப்பினரும் அதைப் பற்றி கேள்வி கேட்க விதிகளில் இடம் இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தகுதியில்லாதவர்களுக்கு பெரியபதவி திடீரென்று வாய்த்துவிட்டால் (மேசையைத் தட்டும் ஒலி) அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்று எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்லுகிறேன். கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளின் காரணமாக நிர்வாக சீர்கேட்டின் காரணமாக எங்கும் மலிந்திருந்த ஊழலின் காரணமாக மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள்
அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இருந்தாலும் கூட்டணி இல்லாவிட்டாலும் இதே முடிவைத்தான் நாங்கள் பெற்றிருப்போம். (மேசையை தட்டும் ஒலி) அதிமுகவை ஆட்சியில் அமர்த்துவது என்று தமிழக மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் அதன்படிதான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் முடிவுகள் அமைந்துவிட்டன தேமுதிகவின் அதிர்ஷ்டம் எங்களுடன் அவர்கள் கூட்டணி சேர்ந்தார்கள் அதனால்தான் அவர்களுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதனால்தான் இத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று இந்த அவையில் வந்து தேமுதிகவின் சார்பில் அமர்ந்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணியில் எனக்கு சிறிதும் விருப்பமில்லை என்பதை இந்த நேரத்தில் நான் பதில் செய்ய விரும்புகிறேன்.
என்னுடைய கட்சிக்காரர்களை திருப்தி செய்வதற்காகத்தான் இந்தக் கூட்டணிக்கு நான் சம்மதித்தேன். இந்தக் கூட்டணி அமையாவிட்டாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது (மேசையைத் தட்டும் ஒலி) அதிமுகவோடு தேமுதிக சேராவிட்டாலும் கூட்டணியில் இணையாவிட்டாலும் என்ன முடிவை பெற்றோமோ என்ன முடிவுகளை சாதித்துக் காட்டினோமோ அதைவிட அதிகான கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கும் (மேசைல்ய் தட்டும் ஒலி). தேமுதிகவிற்கு விட்டுக் கொடுத்த தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருக்கும்.
நிதர்சனமான இந்த உண்மையை அவர்களுக்கும் புரிய வைக்கிறேன்.அனைவருக்கும் புரிய வைக்கிறேன். அதிமுக கூட்டணியுடன் சேர்ந்ததால்தான் தேமுதிகவிற்கு இத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள் அதனால்தான் அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தும் கிடைத்தது. பிரதான எதிர்க்கட்சி என்கின்ற அந்தஸ்தும் தகுதியும் கிடைத்தது. அதிமுக உடன் கூட்டணி சேராவிட்டால் தேமுதிகவிற்கு கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட கிடைத்திருக்காது என்பதுதான் உண்மை. (மேசையைத் தட்டும் ஒலி) தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால் அதில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது கூட புரியாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்டிருப்பதை பார்க்கும்போது இவர்களுடன் கூட்டணி சேர்ந்து அதிமுக தேர்தலைச் சந்தித்ததே என்று நினைக்கும்போது நான் வருத்தப்படுகிறேன்.
உள்ளபடியே அதற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப்படுகிறேன். இன்று எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும்போது அவருடைய சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று நடந்து கொண்டதை பார்க்கும் போது ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர்களுக்கு வர வேண்டிய ஏற்றம், வரக்கூடிய ஏற்றம் எங்களால் அவர்களுக்கு வந்து முடிந்துவிட்டது. முடிந்துவிட்டது. இனிமேல் அவர்களுக்கு இறங்குமுகம்தான். அதை சரித்திரம் சொல்லும் என்பதைச் சுட்டிக்காட்டி நான் அமைய விரும்புகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார். (டிஎன்எஸ்)
Feb 01, 2012
* Do not use semicolon(;)