
சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளுக்கு தமிழக அரசு செலவழிக்கப்போவதாக அறிவித்துள்ள ரூ.12 கோடி, மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரப்போவதில்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழ் அகதிகள் இடர் களைந்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதே இலங்கை தமிழ் அகதிகளின் முகாம்களுக்கு நான் நேரில் சென்று பார்த்தபோது அவர்கள் தெரிவித்த குறைபாடுகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.
மேலும் 12.2.2009 அன்று இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களுக்கு சென்று இலவச அரிசி, வேட்டி, சேலை போன்ற அவர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களை தங்களால் இயன்றளவுக்கு வழங்கவேண்டுமென்று தே.மு.தி.க தோழர்களைக் கேட்டுக்கொண்டேன்.
தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழ் அகதிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் அடைபட்டுள்ளனர். தங்கள் குறைகளை நேரில் தெரிவிக்க தாசில்தாரைக்கூட அணுக முடியாமல் தவித்த அகதிகள், இன்று தி.மு.க. அமைச்சர்களையே அதிகாரிகளின் பரிவாரங்களோடு சந்திக்கின்றனர். ஏதோ இப்பொழுதாவது இந்த அகதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததே என்பதில் நம்மைப் போன்றவர்கள் திருப்தியடையலாம்.
ஆனாலும் இந்த முகாம்களில் அடிப்படை வசதிகளுக்கு இந்த அரசு செலவழிக்கப்போவதாக அறிவித்துள்ளது வெறும் ரூ.12 கோடி தான். இது மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரப்போவதில்லை. அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதியும், உயர்தரக் கல்வியும், வருமானம் தரத்தக்க வேலைவாய்ப்பும், அவர்களும் மற்றவர்களைப் போல் தொழில் செய்ய வசதியும் ஏற்படுத்தி தருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியாவிற்கு வந்த திபெத்திய அகதிகள் எல்லா வசதிகளையும் பெற்று நன்றாகப் படித்து, உத்தியோகங்களிலும், வணிகம் மற்றும் தொழில் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
இலங்கையில் நடைபெற்ற தமிழினப்படுகொலையை தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் இன்றும் அவர்களின் நெஞ்சை நெக்குருகச் செய்கிறது. இந்த சூழ்நிலையில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இப்பொழுதாவது விடிவு காலம் பிறக்கும் என்றால் நமக்கு மகிழ்ச்சி தான்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)