மதுரை, மே 2 (டிஎன்எஸ்) மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 23ஆம் தேதி காலை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள், சுவாமி, அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது.
இவ்விழாவை தொடர்ந்து நேற்று முன்தினம் பட்டாபிஷேகமும், நேற்று இரவு திக் விஜயமும் நடைபெற்றது. முக்கிய விழாவான இன்று (புதன்கிழமை) காலை அம்மன், சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
மணமேடை வடக்காடி, மேலஆடி வீதி சந்திப்பில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு கருங்கல்லால் அமைக்கப்பட்டு 7 வித மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சரியாக 8.38 மணிக்கு சுவாமி பிரியாவிடையுடன் மேடைக்கு வந்தார். பின்னர் மீனாட்சி அம்மன் வந்தார்.
இதை தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் வந்தார். அதன்பிறகு பவளக்கனிவாய் பெருமாள் வந்தார். அதன்பிறகு 9.05 மணிக்கு மோகன், ரவிபட்டர்கள் தலைமையில் யாகம் வளர்க்கப்பட்டு மங்கல இசையுடன் பாலிகா உள்பட திருமண சடங்குகள் நடைபெற்றது.
பின்னர் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத, முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தாரை வார்த்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. சரியாக 9.40 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மாங்கல்ய நாண் பூட்டினார். அப்போது மகா தீபாராதனை காட்டப்பட்டது. அங்கு கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் புதிய மஞ்சள் கயிரை தங்களது கழுத்தில் சூடிக் கொண்டு சுவாமியை வணங்கினர்.
பின்னர் 10.10 மணிக்கு சுவாமி, அம்மன் திருக்கல்யாண மண்டபத்திற்கு சென்றனர். அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இவ்விழாவில் நீதிபதி சொக்கலிங்கம், கலெக்டர் சகாயம், மேயர் ராஜன் செல்லப்பா, டி.ஐ.ஜி. பாலநாகதேவி, எஸ்.பி. அஸ்ராகார்க் மற்றும் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளை (வியாழக்கிழமை) மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. இவ்விழாவினையொட்டி மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. (டிஎன்எஸ்)
May 02, 2012
* Do not use semicolon(;)