யான்கூன், மே.2 (டிஎன்எஸ்) தலைநகர் நைபிதாவில் நாடாளுமன்ற கூட்டம் இன்று (மே 2) நடைபெறுகிறது. இதில் ஆங்சான் சூகியும், அவரது கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களும் எம்.பி.யாக பதவி ஏற்கிறார்கள்.
மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சி தலைவியாகவும், தேசிய ஜனநாயக லீக் தலைவராகவும் இருப்பவர் ஆங்சான் சூகி. அங்கு நடைபெறும் ராணுவ ஆட்சியை எதிர்த்து ஜனநாயகம் மலர போராடி வருபவர்.
மியான்மரில் நாடாளுமன்றத்தின் 45 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட 44 தொகுதிகளிலும் சூகியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரும் ஒரு தொகுதியில் வென்றார்.
ஆனால் எம்.பி.யாக பதவி ஏற்காமல் புறக்கணிக்க முடிவு செய்தார். பல்வேறு கட்சி தலைவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை மாற்றி நாடாளுமன்ற புறக்கணிப்பை கைவிடுவதாக நேற்று முன்தினம் திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
இதனை அடுத்து தலைநகர் நைபிதாவில் நாடாளுமன்ற கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஆங்சான் சூகியும், அவரது கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களும் எம்.பி.யாக பதவி ஏற்கிறார்கள். இதற்காக நேற்று அனைவரும் தலைநகர் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த பதவி ஏற்பு உறுதிமொழியின் போது, ஜனநாயக மரியாதை என்ற சொல்லை ஜனநாயக பாதுகாப்பு என திருத்தம் செய்ய வேண்டும் என சூகி கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதனை ராணுவ ஆட்சியாளர்கள் ஏற்கவில்லை.
இதற்கிடையில் மியான்மர் சென்றுள்ள ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் யான்கூனில் சூகியை சந்தித்து பேசினார். சூகியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.
நாடாளுமன்ற புறக்கணிப்பை கைவிட்டு எம்.பி.யாக பதவி ஏற்க சம்மதம் தெரிவித்ததற்காக சூகியை, பான் கி மூன் பாராட்டினார். பின்னர் பான் கி மூன் தலைநகர் சென்று அதிபர் தெயின் சென் அளித்த விருந்தில் கலந்து கொண்டு சந்தித்து பேச்சு நடத்தினார். அத்துடன் பாராளுமன்ற கூட்டத்திலும் அவர் உரை நிகழ்த்தினார். (டிஎன்எஸ்)
May 02, 2012
* Do not use semicolon(;)