
புதுதில்லி, ஏப்.14 (டிஎன்எஸ்) உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக தில்லியில் ஏப்.16ஆம் தேதி (திங்கட்கிழமை) முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
தீவிரவாதத்தை கட்டுப்படுத்த, மாநிலங்களில் பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களில் இது போன்ற மையங்களை மத்திய அரசு அமைப்பது மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாகும். எனவே பயங்கரவாத தடுப்பு மையங்களை மாநிலங்களில் அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜியும் மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபோல் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். என்றாலும், மாநிலங்களில் பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. எனவே இந்த பிரச்சினை குறித்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல்வர்கள் வற்புறுத்தினார்கள். அதை கருத்தில் கொண்டு மே மாதம் 5ஆம் தேதி முதல்வர்கள்கூட்டத்துக்கு மத்திய உள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து இருக்கிறது.
இதற்கிடையே, வருகிற 16ஆம் தேதி (திங்கட்கிழமை) முதலமைச்சர்கள் மாநாடு தில்லியில் நடைபெற உள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக இந்த மாநாடு கூட்டப்படும் இந்த மாநாட்டில், முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் திங்கட்கிழமை காலை தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். மாநாட்டில் பயங்கரவாதம், மாவோயிஸ்டுகள் பிரச்சினை, காவல் துறையை நவீனமயம் ஆக்குவது, மாநில எல்லை பாதுகாப்பு, கடலோர கண்காணிப்பு போன்றவை குறித்து முதலமைச்சர்களுடன் ஆலோசிக்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தனது கருத்தை வற்புறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் மத்திய உள் துறை மந்திரி ப.சிதம்பரம் தொடக்க உரையாற்றுகிறார். அப்போது பயங்கரவாதத்தை ஒடுக்குவது, ரகசிய உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது ஆகியவற்றில் மத்திய-மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர் வலியுறுத்துகிறார்.
இது தவிர ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்தும், அதை அடக்கும் வழிமுறைகள் குறித்தும் அந்த மாநில முதல்வர்களுடன் ப.சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருவதை அடுத்து, முதல்வர்கள் மாநாடு முடிந்ததும், திங்கட்கிழமை மாலையே முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்ப முடிவு செய்துள்ளார். அதன்படி தனி விமானத்தில் திரும்புகிறார். முதலமைச்சர் தில்லி சென்று வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. (டிஎன்எஸ்)
Apr 14, 2012
* Do not use semicolon(;)