
சென்னை, நவ.7 (டிஎன்எஸ்)
சென்னை மேற்கு மாம்பலத்தில் ரூ.2.14 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 941 புதிய தெரு விளக்குகளை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று இயக்கிவைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி சார்பில் மண்டலம்-8இல், 512 விளக்குகள், மண்டலம்-9இல் 315 விளக்குகள், மண்டலம்-10இல் 114 விளக்குகள் என 941 புதிய தெரு மின் விளக்குகள் ரூ.2.14 கோடியில் இயக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வண்டிக்காரன் தெரு, கன்னிகாபுரம், மேற்கு ஜோன்ஸ் சாலை, ஆலந்தூர் சாலை, அஞ்சுகம் நகர், காந்திமண்டபம் சாலை, அண்ணா சாலை, பச்சையப்பன் தெரு, கோட்டூர் கார்டன், ரங்கராஜபுரம், நரிக்குறவர் காலனி, மேற்கு சி.ஐ.டி.நகர், ஜோதி நகர், நாகிரெட்டி தோட்டம் போன்ற பல்வேறு பகுதிகள் பயனடைகின்றனர்.
துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக பொறுப்பேற்றபோது, 84ஆயிரம் விளக்குகள் இருந்தன. அவர் சென்னை மாநகரை ஒளிமயமான நகரமாக்க குழல் விளக்குகளை அமைத்து தந்தார். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன.
அதன்பின்பு வந்த அ.தி.மு.க. அரசு பொதுமக்களின் நலனில் அக்கறைகொள்ளவில்லை. 2006 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி ஏற்பட்டபின்பு, துணை முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, சென்னை மாநகர் அழகுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளில் சென்னை மாநகரில் புதிய தெருவிளக்குகள் மற்றும் பழைய துருப்பிடித்தத் தெருவிளக்குகளை மாற்றி அமைக்கும் பணி என 16,421 எண்ணிக்கையிலான தெரு மின்விளக்குப் பணிகள் ரூ.25 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன. 534 கி.மீ. நீளத்திற்கு, பழுதடைந்த புதை மின்வடங்கள் ரூ.13 கோடி செலவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 37 எண்ணிக்கை உயர் கோபுர மின்விளக்குகள் ரூபாய் 1.85 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளன.
மேலும், 1,346 எண்ணிக்கை, தானியங்கி விசைப்பான்கள், 60 எண்ணிக்கை சூரிய ஒளி மூலம் இயங்கும் தெருவிளக்குகள், 12,510 எண்ணிக்கை பழைய மின்விளக்கு பிட்டிங்குகள் மாற்றி அமைத்தல் ஆகிய பணிகள் ரூபாய் 2.8 கோடியில் முடிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கடந்த நான்கு நாட்களில் 23 சென்டி மீட்டர் மழை பொழிந்தும் மாநகராட்சி எடுத்த நடவடிக்கையின் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் 160 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய்கள் கட்டப்பட்டது.
இதனால், சைதாப்பேட்டை, ரங்கராஜபுரம், அயனாவரம், கொளத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கவில்லை.
இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சித்தலைவர் நா,ராமலிங்கம், மன்ற உறுப்பினர்கள் மகேஷ்குமார், கவிதா, பிரேமா சக்கரபாணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை கா.கிட்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)