சென்னை, மே.1 (டிஎன்எஸ்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) விண்ணப்பதாரர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 500 கணினி உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தேர்வாணையத் தலைவர் ஆர்.நடராஜ் தெரிவித்தார்.
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் இணையதளம் வழி பதிவு சேவை மையத்தை நேற்று (ஏப்.30) தொடங்கி வைத்து ஆர்.நடராஜ் கூறியதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-4 மற்றும் செயல் அலுவலர் உள்பட பல்வேறு பதவிகளுக்கான 10,718 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் மே-28 ம் தேதி. இந்தப் பணியிடங்களுக்கு இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.50, தேர்வுக்கட்டணம் ரூ.75. இந்தக் கட்டணங்களை இணையதளம் வழியாகவோ அல்லது பணம் செலுத்துச் சீட்டை (செலான்) பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 820 அஞ்சலகங்கள், இந்தியன் வங்கியின் 805 கிளைகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் செலுத்தலாம்.
விண்ணப்பதாரர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை வைத்திருக்கவேண்டும். மேலும் தங்கள் கல்வித் தகுதி, பிற முன்னுரிமை கோருவதற்கான சான்றுகளையும் வைத்திருக்கவேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு உதவ தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா தலைமையிடங்களில் 500 இணையதள வழி பதிவு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இணைய வழி பயன்பாடு பற்றி அறியாதவர்களும், இணைப்பு இல்லாதவர்களும் இந்த சேவை மையங்களைப் பயன்படுத்தலாம்.
இந்த சேவை இலவசமாகும். இந்த சேவை மையம் குறித்த விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இணையவழி மூலம் கடந்த 2 நாள்களில் 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுவரை தேர்வாணையத்தின் தேர்வுகள், 104 மையங்களில் நடத்தப்பட்டன. இந்த முறை 245 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து மாவட்டம் மற்றும் தாலுகா தலைமையிடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் 24 மையங்கள் அமைக்கப்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகள் தரைத் தளத்தில் அமர்ந்து தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுத தங்களுக்கு உதவியாளர்கள் தேவையா என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
இணையதள வழி விண்ணப்பங்களைத் தவிர ஒருமுறை பதிவு செய்தால் 5 ஆண்டுகள் தேர்வு எழுதும் நிரந்தரப் பதிவு முறையை தேர்வாணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுபோன்று நிரந்தரப் பதிவு முறையை மேற்கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள், ஒருமுறை பதிவுக் கட்டணம் செலுத்தினால் போதும். எனினும், அந்தந்தத் தேர்வுக்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்த முறையில் இதுவரை 40 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
தேர்வு எழுதுவதற்கான நுழைவுச்சீட்டையும் இணையதளம் மூலம் பெறலாம் என்றார் நடராஜ். (டிஎன்எஸ்)
May 01, 2012
* Do not use semicolon(;)