உளுந்தூர்பேட்டை, ஏப்.9 (டிஎன்எஸ்) உளுந்தூர்பேட்டை அருகே நைனார்குப்பம் என்ற இடத்தில் பள்ளி வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விருத்தாசலம் அருகே உள்ள பாலக்கொல்லை, ஆரியநத்தம், மதியனூர், பச்சைவெளிகுப்பம், கூட்டேரி கள்ளக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
தினமும் இந்த கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அழைத்து செல்ல பள்ளி நிர்வாகம் சார்பில் 2 வேன்கள் விடப்பட்டிருந்தன. இதற்கிடையே 2 வேன்களில் ஒன்று பழுதானதால் ஒரே ஒரு வேன் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை அந்த கிராமங்களில் இருந்து வேனில் 40-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். உளுந்தூர்பேட்டை அருகே நைனார்குப்பம் என்ற இடத்தில் சென்ற போது வேன் டிரைவர் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார்.
அப்போது எதிரே வாகனம் வந்ததால் அதன்மீது மோதாமல் இருக்க வேன் டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதனால் வேன் நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த பாலக்கொல்லை கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் மகள் அஞ்சனா(வயது 5) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனாள்.
மேலும் பிரதீபா(7), அகிலன்(6), உமாபாரதி(11), அருண்ராஜ்(11), பாலாஜி(12), சுரேஷ்(16), வினோத் பிரியன்(9) மற்றும் சக்திதாஸ், தேவிதாசன், விஷால், அம்முராஜ், ராஜேஸ்வரி, ராஜேந்திரன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
விபத்து நடந்தபோது உடனடியாக அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்து காயம் அடைந்த மாணவ- மாணவிகளை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தை அறிந்த மாணவ- மாணவிகளின் பெற்றோர் மருத்துவமனையில் திரண்டு கதறி அழுதனர். இதனால் மருத்துவமனை வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை தாசில்தார் மார்க்கபந்து மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ- மாணவிகளை சந்தித்து அவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். இதற்கிடையே வேன் விபத்தில் காயம் அடைந்த மாணவ- மாணவிகளில் சிலர் ஆபத்தான நிலையில் இருந்ததால் அவர்கள் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். (டிஎன்எஸ்)
Apr 09, 2012
* Do not use semicolon(;)