சென்னை, மே.1 (டிஎன்எஸ்) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நேற்று (ஏப்.30) நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
5-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய 9 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரின் 41-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் காலிஸ் 2 விக்கெட்டும், சுனில் நரின், பிரெட்லீ தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா வீரர் தாஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
10-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். 3 ஆட்டத்தில் தோல்வி கண்டது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. 10-வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணி சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். 4 ஆட்டத்தில் வெற்றி கண்டது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. (டிஎன்எஸ்)
May 01, 2012
* Do not use semicolon(;)