நெல்லை, ஏப்.2 (டிஎன்எஸ்) சென்னை கமாண்டோ படை போலீசார், ஒரு வாகனத்தில் கூடங்குளத்தில் இருந்து செட்டிகுளம் அணுவிஜய் நகருக்கு நேற்று சென்றபோது, வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்தவேனில் பயணம் செய்தவர்களில் கமாண்டோ போலீசார் பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணு உலை பணிகள் தொடங்கப்பட்டதை முன்னிட்டு, அணுமின் நிலைய பகுதிகள் மற்றும் பணியாளர்கள், விஞ்ஞானிகள் தங்கியுள்ள செட்டிகுளத்தில் உள்ள அணு விஜய் நகர் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணியில் நெல்லை மாவட்ட போலீசார், துணை ராணுவப் படையினர், அதிரடிப் படையினர், அதிவிரைவுப் படையினர் மற்றும் சென்னை கமாண்டோ போலீஸ் படையினர் ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை கமாண்டோ படை போலீசார், ஒரு வாகனத்தில் கூடங்குளத்தில் இருந்து செட்டிகுளம் அணுவிஜய் நகருக்கு இன்று சென்றனர். அவர்கள் சென்ற வேன், செட்டிகுளம் சந்திப்பு அருகே வந்தபோது, நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது.
அதன் மீது மோதாமல் இருப்பதற்காக வேனின் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் நிலை தடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்தவேனில் பயணம் செய்துவந்த சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ், கமாண்டோ போலீசார் பரமசிவம் (வயது27), மணி கண்டன், சூரிய பிரபாகர், செல்வகுமார், வேனை ஓட்டி வந்த ராமச்சந்திரன் ஆகிய 6 பேரும் காயமடைந்தனர்.
அவர்களில் பரமசிவம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேரும் அங்கிருந்து மீட்கப்பட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் பலியான பரமசிவத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதும், சம்பவ இடத்திற்கு நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. வரதராஜு, நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி ஆகியோர் வந்து விசாரணை நடத்தினார்கள். விபத்தில் பலியான கமாண்டோ படை போலீஸ் காரரின் சொந்த ஊர் சாத்தான்குளம் ஆகும். (டிஎன்எஸ்)
Apr 02, 2012
* Do not use semicolon(;)