
ஹைதராபாத், நவ.5 (டிஎன்எஸ்)
இந்திய அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்து, இந்திய அணி வெற்றி பெற 351 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. துவக்க வீரர்களாக வாட்சன், மார்ஷ் ஆட்டத்தை தொடங்கினர்.
ஆரம்பம் முதலே இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 25.2 ஓவரில் 145 ரன் விளாசியது.
அதிரடியாக விளையாடி 89 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ருடன் 93 ரன்கள் குவித்த வாட்சன் ஹர்பஜன் சுழலில் சிக்கி ஜடேஜாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து கேப்டன் பாண்டிங், மார்ஷ் உடன் இணைந்தார். இந்த ஜோடியும் இந்திய பவுலர்களை பதம் பார்த்தது. பாண்டிங் 45 ரன்கள் எடுத்த நிலையில் பிரவீன் குமார் பந்து வீச்சில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஒயிட், ஹஸ்ஸி ஆகியோரும் தங்கள் பங்கை செவ்வனே செய்ய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்தது.
மார்ஷ் அதிரடியாக விளையாடி ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 112 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 112 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஒயிட் 57 ரன்கள் எடுத்து கடைசிப் பந்தில் அவுட் ஆனார். ஹஸ்ஸி 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் பிரவீன்குமார் 2 விக்கெட்டுகளும், நெஹ்ரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க இருக்கிறது.
துவக்க வீரர்கள் சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் பொறுப்பை உணர்ந்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தால் இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறலாம்.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)