இந்தோனேசியாவில் இன்று (ஏப்.11) கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 8.9 எனப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக தமிழகத்திலும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 எனப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்து தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் கூடினர். இந்த நில அதிர்வு பல இடIங்களில் உணரப்பட்டது.
இதேபோல் ஊட்டி, குன்னூர், திருச்சி, நாகப்பட்டினம் உள்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டதாக நமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலநடுக்கத்தையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி விரைந்தனர். அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் கட்டடங்களில் இருந்து வெளியேறி வீதியில் குழுமினர். நிலநடுக்கத்தினால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.
எனினும் சில இடங்களில் தொலைத்தொடர்பில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை நீட்டிப்பு:
இந்நிலையில் ஹவாய் தீவில் அமைந்துள்ள பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்தோனேஷியால் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கூறியதாவது,
இந்தோனேஷியாவில் இன்று மதியம் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களும் சுனாமியை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கங்கள் இல்லை. அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கக்கூடிய நிலநடுக்கங்களே.
இந்நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில் உள்ள கடற்கரை பகுதிகளில் பாதிப்பு இருக்கும். தற்போது அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏதேனும் சுனாமி ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
இந்த நிலநடுக்கத்தால் சுமார் அரை மீட்டரிலிருந்து 1 மீட்டர் அளவுக்கே சுனாமி அலைகள் எழும்பும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட இந்திய கடற்கரையோர பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று முதலில் தெரிவித்திருந்தது.
இருப்பினும், சர்வதேச கடல் பகுதிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்திய கடல் பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் எனவும் அம்மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் முதல் நிலநடுக்கத்தை அடுத்து தொடர்ந்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது சுமார் 6 மீட்டர் அளவில் அலைகள் எழும்பும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்திய கடலோரங்களில் எச்சரிக்கை:
இதனால் இந்திய கடற்கரையோரப் பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
(டிஎன்எஸ்)
Apr 11, 2012
* Do not use semicolon(;)