
சென்னை, நவ.7 (டிஎன்எஸ்)
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து வருவதால், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறுகையில், வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இப்போது விரிவடைந்துள்ளது. இது கன்னியாகுமரி பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா வழியாக தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரத்தின் கடலோரப் பகுதி வரை நீண்டு காற்றழுத்தத் தாழ்வு நிலையாக பரவியுள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக் கூடும். தமிழகத்தின் உட்பகுதி மாவட்டங்களிலும் சில இடங்களில் பலத்த மழை பெய்யக் கூடும்.
சென்னையில் நேற்று விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வேளச்சேரி, விஜயநகரம், திருவான்மியூர், வில்லிவாக்கம், கொளத்தூர், வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளச் சேதம், இழப்பு குறித்து தகவல் அளிக்க சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படக் கூடிய கட்டுப்பாடு அறையில் இலவச தொலைபேசி எண் "1070' இயங்கி வருகிறது.
மாவட்டங்களின் தலைமையிடத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி எண் "1077' மூலம் அந்தந்த மாவட்டங்களின் நிலவரம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என்று வருவாய்த் துறைச் செயலாளர் பழனியப்பன் கூறினார்.
இந்த இலவச தொலைபேசி எண்கள் மூலமாக மழை, வெள்ளம் குறித்த தகவல்களைக் கேட்டுப் பெறலாம். பொது மக்களும் தங்களிடம் உள்ள தகவல்களைத் தெரிவிக்கலாம்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)